சென்னை:

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் – பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின், 31-ஆம் ஆண்டு திருமண நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேமுதிக தொண்டர்கள், அவர்கள் இருவருக்கும், பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அரசியலில் மேலும் பல்வேறு மாற்றங்கள் வரப்போவதாகக் கூறினார். மேலும், மூன்றாவது அணி அமைப்பது குறித்து, தற்போதைய சூழலில் ஏதும் கூற இயலாது, எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.