சென்னை

வரும் நவம்பர் 4 ஆம் தேதி  முதல்வர் மு க ஸ்டாலின் ஹெல்த் வாக் சாலை திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். 

இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,

”நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த் வாக் என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன என்று அவர்களிடம் கேட்ட போது, மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். 

மேலும் இந்த சாலைகள் 8 கி.மீ தூரத்திற்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்ட போது, 8 கி.மீ என்பது 10 ஆயிரம் அடிகள் ஆகும். ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே 8 கி.மீ தூரத்திற்கு அமைத்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். 

தமிழகத்துக்குத் திரும்பியதும் இந்த அருமையான திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தேன். உடனடியாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. 

வரும் நவம்பர் 4 ஆம் தேதி இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். அன்று காலை 6 மணிக்குத் தொடங்கி வைத்து அவர் நடைப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.” 

என்று அறிவித்துள்ளார்.