சென்னை: ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ. 1கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த நிலையில், அவரது மனைவிடம் இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், கடந்த 21ந்தேதி இரவு நேர பணியின்போது, ரோந்து சென்றார். அப்போது,  நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில்  அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வதை கண்டதும், அவர்களை  துரத்திப் பிடித்துள்ளார். அப்போது,  ஆடு திருடர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், வெட்டிக்கொலை செய்யப்பட்ட பூமிநாதன் மனைவி கவிதா மற்றும் அவரது மகன் குகன் பிரசாத் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  கோட்டையில் வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளருடன் பேசிய எஸ்எஸ்ஐ பூமிநாதனின் மகன் குகன் பிரசாத், தமிழக முதலமைச்சர் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியதாகவும், விரைவில் அரசு வேலை வழங்க உள்ளதாக உறுதி அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.