மதுரை: தேவர் குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செய்யும் வகையில் ராமநாதபுரம் செல்லும் வழியில், மதுரையில் உள்ள  முத்துராமலிங்க தேவர் சிலை மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அத்துடன் மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்டோபர் 30) தென் மாவட்டங்களில்பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஏற்கனவே 27ந்தேதி மருது சகோதரர்கள் குருபூஜை நடைபெற்றது. இந்த நிலையில்,  முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பசும்பொன் சென்றுள்ளனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரமாண்ட முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் சிலைக்கு அவர்களின் 222வது குருபூஜையினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி, கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மதுரை – தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்றும் அமையவுள்ளது குறிப்பிடத்தகக்து.

இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலின்  உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள், கட்சியினர் இருநதனர்.