சென்னை

திராவிட ஆட்சியின் இரு கண்களாகக் கல்வியும் மருத்துவமும் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் இரு பதிவுகள் இட்டுள்ளார்.

அந்தப் பதிவுகளில் முதல்வர்,

“கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி கூறுவதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் #CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது.

நாட்டிற்கே முன்னோடியாக 2009-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16 ல் தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது #CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம்,”

என்று தெரிவித்துள்ளார்.