சென்னை: நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ  மைதானத்தில் நாளை அதிமுகவின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

அதிமுக வெற்றி இயக்கம், அது அசைக்கமுடியாத எக்கு கோட்டையாக உள்ளது.  அதிமுக கூட்டம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் நாளை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அதை மீறி எதுவும் நடக்காது.

பாஜக தலைமை கூறும் கருத்தை தான் ஏற்க முடியும், அங்கிருந்து வந்து செல்வர்கள் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். இது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், அந்த வகையில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பார். சீமான் எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் வாழும் சகாப்தமாக இருந்து வருகிறார், அவரை தொட்டால், அவர்கள் கெட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.