சென்னை

ஜெயலலிதாவின் சேலை இழுப்பு அவரே அரங்கேற்றிய நாடகம் என முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்திய கட்சி திமுக என விமர்சித்துப் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  முதல்வர் இது குறித்து ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில்,

”மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டு மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போலக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார்.

அவர் 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார்.நேரலையில் பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளைக் காண் முடிந்தது.

ஒரே வாரத்தில் பாஜக ஆட்சியை கவிழ்த்த கட்சி அதிமுக. அக்கட்சிக்கு எதிராக 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்ட மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?

அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார்.  தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அவராக நடத்திக் கொண்ட நாடகம் அது என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.  

சட்டமன்றத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. தமிழக சட்டசபை நிகழ்வைப் பொய்யாக திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது,

என்று கூறியுள்ளார்.