சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும் நிலையில்,  50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் தமிழக முழுவதும் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.  தொற்று பரவல் கட்டுக்குள் வராத நிலையில், நாளை முதல்  மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பேருந்து, ரயில் போக்குவரத்தின்போது 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பபட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.