சென்னை: திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, திருச்சி, மதுரையில் கட்டப்பட உள்ள டைடல் பூங்காங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. திருச்சி, மதுரையில் கட்டும் டைடல் பூங்காக்கள் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை, திருச்சியில் தரை தளம் மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக அரசின் டைடல் பாா்க் நிறுவனம், சென்னை தரமணி, கோவை, சென்னை பட்டாபிராமை தொடா்ந்து, திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்களை அமைக்கிறது. திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ. 315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 14.16 ஏக்கா் நிலத்தில் தரைத் தளம், 6 தளங்களுடன் அமையும் இந்த பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு கடந்த மாதம் ஒப்பந்தம் கோரியது. இந்தப் பூங்காப் பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்த டைடல் பூங்காங்களுக்கு சென்னையிலிருந்தபடி டைடல் பூங்காக்கள் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி வழியாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.