சென்னை: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தனது கொளத்தூர் தொகுதியில் மீண்டும் இன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வடகிக்கு பருவமழைகாரணமாக தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பெய்த மழையால், சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகள் வழங்கினார்.  மேலும் போர்க்கால அடிப்படையில் வெள்ளப் பாதிப்புகள் விரைவாக சீர் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10-12-2021) மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, வள்ளியம்மை தெரு மற்றும் ஜி.கே.எம். காலனி 12-வது தெரு ஆகிய தெருக்களில் பொதுமக்களை சந்தித்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2021)  அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து,  முதலமைச்சர் அவர்கள் வள்ளியம்மை தெருவில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.  மக்களின் கோரிக்கையினை துரிதமாக களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில்  முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால்,  லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.