சென்னை: ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் சென்றுள்ளார். 4 நாள் அங்கு முகாமிடும் அவர்,  நேற்று மாலை தனி விமானத்தில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றார்.  துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் கண்காட்சி அரங்கையும் திறந்து வைக்கிறார்.  தமிழகத்திற்கான இடத்தில் தமிழகத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும்,  துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் பணிகளிலும் அந்நாட்டு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.

முன்னதாக இன்று ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.