சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் 5 வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 14வகை ரேசன் பொருட்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற முன்களப்பணியாளர்கள் நிவாரணம் உள்பட 5 வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த  கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் தமிழகம் முழுவதும் உற்சாக மாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, சாலையோரங்களில் கருணாநிதி புகைப்படத்துடன் திமுகவினர் மரியாதை செய்து வருகின்றனர்.

முன்னதாக கருணாநிதி பிறந்தநாளையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று   தலைமைச் செயலகத்தில் 5 வகையான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதன்படி,

முதலாவதாக, 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கக்கூடிய திட்டத்தை 10 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த தொகுப்பில்,  கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுத்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம் ,கடலை பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகு 100 கிராம் உள்ளிட்ட 14 பொருட்களில் இடம்பெற்றுள்ளன.

2வதாக  கொரோனா நோய்க்கு நிவாரணமாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது தவணையாக ரூ.2000  வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதன்படி வரும் 5-ஆம் தேதி ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூ.2000 பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

3வதாக கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

4வதாக, கொரோனா தொற்றால் நோயால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களான  மருத்துவர், காவலர் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 

5வதாக, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் செயல்படக்கூடிய கோயில்களில் சம்பளமின்றி பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார்.