சென்னை: ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில்  தொடங்கி வைத்தார்.

உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’  என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைக்கவும், விழா பேருரையாற்றவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மத்தியஅரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து, வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.

இந்த நிலையில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

தொடர்ந்து, 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதி மேம்பாட்டு கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் ர் முன்னிலையில் ரூ.2, 210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. 24 தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 40 ஆயிரத்து 695 பேர் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2,000 பேருக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.