சென்னை: 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற் கென சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 20 நடமாடும் தேநீர் கடை வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் சென்னையில் 10 கடைகளும், திருப்பூரில் 3 கடைகளும், ஈரோட்டில் 3 கடைகளும், கோயம் புத்தூரில் 4 கடைகளும் டீ விற்பனையை மேற்கொள்ள உள்ளன. கலப்படமற்ற, தரமான தேநீர் பொதுமக்களுக்கு கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழக சுற்றுச்சூழல், கால நிலை மற்றும் வனத்துறை துறையின் முதன்மை செயலரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான (பொறுப்பு) சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.