சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் இன்று சென்னை  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மறைமலை நகரில் இருக்கக்கூடிய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சட்டம் ஒழுங்கு நிலவரம், வளர்ச்சித் திட்ட பணிகள், அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி,  முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம்  நேற்று முதல் (17ந்தேதி, 18ந்தேதி) 2 நாட்கள் சென்னை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய கூட்டத்தில் (அக்டோபர் 17ந்தேதி) காவல்துறையினருடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  இந்த  ஆய்வுக்கூட்டத்தில்,  மக்களின் அச்சத்தைப் போக்கி, குற்றங்களைத் தடுத்திட புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தோடு, #FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  சாலை விபத்துகளைக் குறைத்திடப் பிற துறையினருடன் இணைந்து காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்  ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் – எனப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.

இன்று 2வது நாள் ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் இருக்கக்கூடிய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த ஆய்வு கூட்டத்தில்6 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். மணல் துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்பட 28 துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பருவமழை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் மழை பாதிப்பு என்பது அதிகமாகவே காணப்படும். எனவே மழை பாதிப்பு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாகும். இந்நிலையில் இந்த ஆண்டு பொறுத்தவரை மழை பெய்தாலும் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருக்கக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் என நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது குறித்து அது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது வரை திறக்கப்படாமல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனே திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் களஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த கூட்டமானது 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.