மேல்மருவத்தூர்: மறைந்த  பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  மரியாதை செலுத்தினார்.  அதுபோல புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும்  மரியாதை செலுத்தினர்.  அதுபோல பாமக தலைவர் ராமதாசும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார்.  அவருக்கு வயது 82. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று (19-10-2023)  மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அருகே உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி,  நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது.

இதையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது  இறுதி சடங்கு அரசு மரியாதையுடன்  நடைபெறும் என அறிவித்தார்.

பங்காரு அடிகளார் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து  பெண் பக்தர்கள் சாரை சாரையாய் திரண்டு வந்து அடிகளார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

nந

இதற்கிடையில் பங்காரு அடிகளார் உடலுக்கு, அரசியல் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேல்மருவத் தூரில் உள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சருடன்   அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அரசியல் பிரமுகர்கள், பங்காருஅடிகளாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.