சென்னை: குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார் என மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை வந்து இன்று காலை 10 மணி அளவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார், முதல்-அமைச்சரை முழுமை யாக நம்புகிறோம் என்றார். ஸ்ரீமதி விவகாரத்தில் முதலமைச்சர் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதி நிலை நாட்டுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பள்ளி நிர்வாகிகள் தற்காலிகமாக தான் ஜாமினில் வெளிவந்துள்ளனர் நிச்சயம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். ஸ்ரீமதி விசாரணை இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால்தான், சிசிடிவி காட்சிகளை தர மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

” வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடப்படாமல் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியவர்,  தனியார் பள்ளி நிர்வாகிகள் ஜாமினில் வெளிவந்துள்ளனர். அவர்களது ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

எங்களிடம் ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்ற ஆவணம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் வீடியோ ஆதாரங்கள் இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை. அதுபோல ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணமும் எங்களிடம் வழங்கப்படவில்லை.  ஸ்ரீமதி உடற்கூறாய்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. நாங்கள் கேட்ட மருத்துவர்கள் வைத்து உடற்கூறு ஆய்வு செய்து இருந்தால் நாங்கள் திருப்தி அடைந்து இருப்போம்.

பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சியை பெற்றோர் ஆகிய எங்களை அழைத்து ஏன் காட்டவில்லை. அதனால் தான் எங்களுக்கு இதுவரையில் சந்தேகம் தொடர்கிறது. பள்ளி நிர்வாகம் அனைத்து தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து விசாரணையை நடத்த விடாமல் செய்கின்றனர்.

ஸ்ரீமதியின் தோழிகள் என பள்ளி மாணவிகள் சிலர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் ஸ்ரீமதியின் தோழிகள் தானா? என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் யார் என்ற பெயர் பட்டியல் வெளியில் வந்தால் தான் அவர்கள் உண்மையிலேயே ஸ்ரீமதியின் தோழிகளா?  என்பதை நான் சொல்ல முடியும்.

பள்ளி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.