சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவானது  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில்  கலந்துகொள்ளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

விழாவைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில்,  கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உரை ஆற்றவுள்ளார்.

 இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் எல்.எஸ். சத்தியமூர்த்தி, புதிதாக துவங்க உள்ள வணிக நீதிமன்ற முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.