சென்னை: சிதம்பரம் கோவிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற 15வயது சிறுமி திருமண விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அநத  சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அப்போது  நடத்தப்பட்டது போலியான திருமணமே என்று தெரிவத்து உள்ளார். மேலும், தீட்சிதர்கள் சார்பிலும் வழக்கை ரத்து செய்ய கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரத் நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க தமிழக அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவிலின் கணக்கு வழக்குகளை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்துள்ளது. இதற்கிடையில், சிதம்பரம்  கோவிலில் கடந்த ஆண்டு (2021ஆம் ஆண்டு) 15 சிறுமிக்கு தீட்சிதர்கள் திருமணம் நடத்தியதாக கடலூர் அனைத்து மகளிர் போலீஸில் மாவட்ட பெண்கள் நல ஊரக அலுவலரான தவமணி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல தீட்சிதர்களை கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  குழந்தை திருமணம் ஏதும் நடத்தப்படவில்லை என்றும், வழக்கை ரத்து செய்யக் கோரி, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜர் – சிவகாமி அம்மன் சன்னதியில் போலியாக திருமணம் நடத்தப்படும் எனவும், இவ்வாறு பல குடும்பத்தினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தியுள்ளதாகவும், அவை உண்மையான திருமணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீட்சிதர்களுக்கும், நடராஜர் கோயிலுக்கும் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த சிறுமியன் தந்தை தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கு சம்பந்தமாக தனது மகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததால், அவர்  மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும்,  பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து வருகிறார். இதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது