சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு புகழ்மிக்க உலக செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை அருகே உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

2ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’  போட்டி நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை தமிழகஅரசு பெற்றுள்ளது. உலக அளவில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில், அதுவும் நமது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்,  செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில்  நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஒலிம்பிக் போட்டியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 2500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.