சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், உலக நாடுகளின் வீரர்களை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையம் மூலம் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் வரை, ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவும், அதுவும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 188 நாடுகள் பங்கேற்க உள்ளது.  இந்த நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன. இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரம் உலக நாடுகளில் இருந்து வரும் வீரர்களை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை விமானம் நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் உள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் “வணக்கம் சென்னை” பதாகை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகினற்ன.

 சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரை 10.10 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் எதிரே உள்ள சாலை மேம்பாலத்தில் பசுமை பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் “வணக்கம் சென்னை” பதாகை அமைக்கும் பணி ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20.2 கி.மீ. நீள ராஜீவ்காந்தி சாலையில் மையத்தடுப்பானில் வண்ணம் பூச்சு பணி ரூ.85 லட்சம் செலவிலும் சாலை பாதை வரையரைக் கோடிடும் பணி ரூ.160 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.

இந்த சாலையில் அமைந்துள்ள 14 சாலை பாதசாரிகள் நடைபாதைகள் ரூ.58 லட்சம் செலவில் வண்ணம் பூச்சு செய்யும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலையினை இணைக்கும் 2.4 கி.மீ. நீள சாலையில் 1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.20கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மகாபலிபுரம் முதல் பூஞ்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 2.4 கி.மீ. நீளசாலை ரூ.1.89 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரை முதல் மகாபலிபுரம் வரையில் சாலை மையத்தடுப்பில் வண்ணம் பூசுதல், சாலைப்பாதை வரையரைக் கோடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அமைத்தல், 55 சோலார் எச்சரிக்கை சிக்னல் விளக்குகள் அமைத்தல் மற்றும் சாலை புருவங்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

சாலையில் நகரப் பகுதியில் அமைந்துள்ள மிள் விளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்கு கள் அனைத்தும் ரூ.80 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு வருகின்றது.

பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை 5.85 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் 10 கி.மீ நீளத்திற்கு சாலை வரையரைக் கோடு, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பெரிய தகவல் பலகைகள் அமைக்க ரூ.1 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மைய தடுப்புச் சுவருக்கு கருப்பு வெள்ளையடித்தல், பசுமை செடிகள் வளர்த்தல், சாலையோரம் உள்ள மண்குவியல்களை அகற்று தல் உள்ளிட்ட பணிகள் ரூ.48.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரை ராஜீவ்காந்தி சாலையில் 4.70 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் சாலையை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுசேரி முதல் திருப்போரூர் வரை பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்க மைய தடுப்பான் கள் அமைக்கும் பணி ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் முதல் பூஞ்சேரி வரை 10 கி.மீ. நீளத்திற்கு மத்திய தடுப்புச் சுவர் பழுது பார்த்தல், வர்ணம் அடித்தல் மற்றும் மண் புருவங்களை பழுது பார்த்தல் பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம் நகரில் 800 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ரூ.1.20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி சாலை 400 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுதுபார்த்தல் மற்றும் கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.5 லட்சம் மதிப்பில் நடை பெற்று வருகிறது.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் சாலையில் 225 மீட்டர் நீளத்திற்கு வரை பேவர்பிளாக் அமைக்கும் பணி ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம் ஐந்துரத சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுது பார்த்தல் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணி ரூ.15 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

5.75 ஏக்கர் பரப்பளவில் 100 பேருந்துகள் மற்றும் 50 கார்கள் நிறுத்த இடவசதி. வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி. வாகன ஓட்டுனர் ஓய்வு அறை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு சோதனை மையம். மருத்துவ அவசர சிகிச்சைக்காக மருத்துவ அறை. ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு சோதனை பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு மையம், கண்காணிப்பு மற்றும் உயர் அலுவலர் அறை. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.