சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், போட்டியிட்டு வெற்றி பெற்ற போது தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதைஎதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்..
இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.