சென்னை: சென்னை வாசிகளின் முக்கிய பயண ஊர்தியாக மெட்ரோ ரயில் மாறி வருகிறது.  கடந்த ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை  மாநகர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில்  மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப அதிக சேவைகளை இயக்குவதுடன், பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில்,  2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1,48,121 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ”கடந்த ஆண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,54,733 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.