சென்னை: இன்று சென்னை  12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம்  அறிவித்து உள்ளது.

வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கியது. கடந்த மாதம் மழையின் அளவு சுமார் 43% குறைவாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் நவம்பர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை  தொடங்கிய நாள் முதல் பல பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு  மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பி வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-23 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில்  இன்று முற்பகல், சென்னை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், ராம்நாதபுரம், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், இன்று  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:

06.11.2023: கேரளா – தெற்கு கர்நாடகா மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.11.2023 மற்றும் 09.11.2023: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.