சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக அரசு பணிகளின் பெரும்பாலான துறைகளில் தற்காலிக பணியாளர்களே நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அரசு பணிகள் முழுமை பெறாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆனால் அதை செயல்படுத்த மறுத்த தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், பி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  அப்போது தலைமை செயலாளர் சார்பில், “2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள்,அத்துடன், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியியதுடன்,  2020 நவம்பர் 28-ந்தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

 இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,   2020 நவம்பருக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதுடன்,   தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்து, வழக்கை மார்ச் 17-ந்தேதிக்கு வைத்ததுடன், அதற்குள் இந்த உத்தரவுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.