சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில், முன்னாள் அதிமுக அமைச்சர் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்த கருத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆறுமுக சாமி ஆணையத்தின் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும், ஒருதலைப்பட்சமாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியில் இருந்தபோது. கடந்த 2016-ஆம் ஆண்டு  உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில்,  சிகிச்சைக்கு பிறகு திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து 2017 இல் உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  அந்த அறிக்கையில், ”ஜெயலலிதா மரணத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ,ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை, ஒருதலைபட்சமானது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகள். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம்; எங்களுடைய கடவுள். ஆகையால், ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

எங்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவை இழந்து இருக்கக்கூடிய, தவிக்கக்கூடிய இந்த நேரத்தில் வெந்தப் புண்ணிலே வேல் பாய்ச்சியது போன்றதாக ஆணையத்தின் கருத்துகள் இருக்கின்றன. இருந்தாலும், பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்ட வல்லுநர்களோடு கலந்து சட்டப்படி நேர்மையோடு முறையாக நெஞ்சுரத்தோடும் நெஞ்சத்தில் தூய்மையோடும் இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,   இன்று நீதிபதி இளந்திரையின் தீர்ப்பு வழங்கினார்.

விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இருந்து நீக்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.