சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தால் கோயிலுக்கு சொந்தமான 60000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மறுஉத்தரவு வரும் வரை, இவ்விரண்டு கோவில் சொத்துக்களையும் யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் கூறினர். தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.