சென்னை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது எனத் தீர்ப்பு அளித்துள்ளார்.

அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. எனவே வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

கடந்த 13 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 3 நாள் நடைபெற்றது.  வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்பில்,-

”வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  தாம் குற்றம் செய்யவில்லை என்பதைச் செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அவரும் சட்டத்துக்கு உட்பட்டவர் தான்.

விசாரணை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்கிறேன். அவருடைய தீர்ப்பின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சரியானது

சட்ட  விதிகளின்படி அமலாக்கத்துறை கைது செய்துள்ளது  மேலும். செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. அவருடைய சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்”

என நீதிபதி கூறி உள்ளார்.