சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை  நடைமுறையில் தீட்சிதர்களுக்கு அதிகாரம்  இல்லை என அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறை இந்த மனுவுக்கு  தாக்கல் செய்த பதிலில் சோழமன்னர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்பினால் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒரு பொது கோவில் என்றும் அது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், மேலும் கனகசபையில் இருந்து தரிசனம் செய்வது ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

கனகசபையில் இருந்து தரிசனம் செய்வதற்கு அனுமதியளிக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ரம் இந்த விவகாரத்தில் அரசை முடிவெடுக்க அறிவுறுத்தியிருந்தது.  அரசு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என்றும் எனவே இதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் கனக சபையில் மாற்றம் செய்யத் தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை மனுவிற்குப் பதில் மனு அளிக்க மனுதாரருக்குக் கால அவகாசம் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது