சென்னை

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “மது நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது. அண்மையில் நடந்த ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதையும் மீறி 21 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு மது விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை. ஆகவே, 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது.  .குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்குப் பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும்.

சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்கப்படவுள்ளது.  மாணவர்கள் எளிதில் மதுவைப் பெற இது வகை செய்யும். ஆகவே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்கத் தடை விதிக்க வேண்டும்” என்று மனு ஒன்றை அளித்திருந்தார்.

மனு மீது நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தியது.  விசாரணையில் தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ” இந்த தானியங்கி விற்பனை இயந்திரங்கள் டாஸ்மாக் கடைகளுக்குள் தான் அமைக்கப்பட உள்ளன.

யார் வேண்டுமானாலும் அங்கு மது வாங்கலாம் என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.  தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது வாங்க வருபவர்களைக் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது. இதைக் குறித்து சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையொட்டி நீதிபதிகள் அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.