சென்னை

வ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளதுடன் தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்குத் தடை விதித்தனர்.

ஆனால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் சம்பளம் வழங்கிவிட்டார். அதன்படி அதன் உரிமை தயாரிப்பாளருக்குச் சென்றுவிடும் அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்றுப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது’ என்று கூறினார்.

இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என்றார். உடனே நீதிபதிகள். வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அந்த வகையில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்தப் பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம் என்பது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை ஜூன் 2 ஆம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.