சென்னை

னைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில் அவர், ”கர்நாடக உயர்நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  ஆகவே, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு உள்ளது. மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக எச்சரித்தது. இதையொட்டி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.