சென்?னை

தமிழகத்தில் காவல்துறையினர் யாருடைய ஏஜன்சியாக செயல்படுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது.

கடந்த மாதம் பாமக வின் கொள்கை குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி பிரச்சாரம் நடத்த ராணிப்பேட்டை காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து ராணிப்பேட்டை பாமக செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,

“மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது, மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி வழங்குவார்களா?.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்?” என்று நீதிபதி வினா எழுப்பினார்.

தமிழக காவல்துறையினர் ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால், டி.எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்படும் என்று கூறி விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.