சென்னை

ண்டிகை தினங்களையொட்டி சென்னை நகரில் கூடுதல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மாநகராட்சி கட்டாயம் ஆக்கி உள்ளது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் அங்காடி பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கொரொனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பண்டிகை விடுமுறை நாட்கள் வர உள்ளதால் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம்கூட வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. வணிக வளாகங்களில் உள்ள அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.