சென்னை,

னியார் பால்களில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயணம் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்ற்ச்சாட்டை கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன. அதைத்தொடர்ந்து நிரூபிக்க தயார் என்று  அமைச்சர் சவால் விட்டார்.

பாலில் ரசாயணம் கலக்கப்படுவது குறித்த அமைச்சரின் பேச்சு பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

 

கேள்வி:  பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே, இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:  நான் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதுகுறித்து தெளிவாக குறிப்பிட்டு இருக்கி றேன். நான் மட்டுமல்ல எல்லா கட்சிகளின் தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள்.

அவர்களது சாதனை என ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதால், அதனை மூடி மறைப்ப தற்காக திட்டமிட்டு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்திருக்கக்கூடியவர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோருக்கு நிச்சயமாக இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மதவாத உணர்வை புகுத்துவதற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்றாக இதனை அறிவித்து இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இதனை திரும்பப்பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேள்வி:  தனியார் பாலில் ரசாயணம் கலந்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி  குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

பதில்: நான் கேட்கும் ஒரே கேள்வி, இதே அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் கலப்படம் செய்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. அது என்னவானது என்றே தெரியவில்லை.

அப்படிப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சர் தனியார் பாலில் ரசாயணம் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லியிருக்கிறார்.

அப்படியென்றால், முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

எனவே, இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.