சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளங்கள் மழைநீரால் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில்,  செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால்,  முழுக் கொள்ளளவை எட்ட உள்ளது. இதனால்,  பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து, வெள்ளநீர் போக்கி வழியாக வினாடிக்கு  100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், ஏரி கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். சனிக்கிழமை (அக்.7) நீர் இருப்பு 21.96 அடியாகவும், கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை (அக்.8) 10 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.