புதுடில்லி

ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐவர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டனர். இதையொட்டி சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்தியப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு   இந்த 5 பேரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 16 ஆம் தேதி வரை அவர்களது நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு காவல்துறை விசாரித்தது.

போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தைச் சினிமா தயாரிப்பு, ஓட்டல் தொழிலில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தது தெரியவந்தது. ஜாபர் தயாரித்த படத்தைப் பிரபல இயக்குநர் அமீர் இயக்கியுள்ளார். எனவே அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு அவரை டெல்லி வரவழைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.

தற்போது  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.