டில்லி

விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி நோக்கி பேரணி நடத்தி டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். எனவே விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்குத் தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டில்லி நோக்கி வரத் தொடங்கினர்.

அவர்களைப் பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் காவல்துறை தடுத்து நிறுத்திதால்விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகள் மற்ற பாதைகள் மூலம் டில்லிக்குள் நுழைந்துவிடாதபடி டில்லியின் எல்லைகளில் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் இன்று டில்லிக்கு வரும்படி போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். வரும் 10-ம் தேதி நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்ததால் விவசாயிகள் டில்லிக்கு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.

டில்லி எல்லைகளில் பதற்றம் அதிகரித்தது. கூடுதல் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் விவசாயச் சங்கத் தலைவர்களின் அழைப்பை ஏற்று டில்லி-அரியானா எல்லைப்பகுதியான சிங்கு எல்லையில் விவசாயிகள் வரத் தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும். என்று காவல்துறை எச்சரித்துள்ளது.