டில்லி

ரிசர்வ் வங்கி கடன் அட்டை வழங்க புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு நெட் ஒர்க்குகளாக மாஸ்டர் கார்டு, விசா, ருபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப், டைனர்ஸ் கிளப் ஆகியவை உள்ளன. ஒவ்வொரு கிரெடிட் கார்டுகளில் இந்த நெட்வொர்க்குகளில் ஏதேனும் ஒன்றின் பெயர் இருக்கும்.  இந்த நெட்வொர்க்குகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்ய முடியாதவகையில், நெட்வொர்க்குடன் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளும், நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொள்வதாக ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் வந்தன.

எனவே கிரெடிட் கார்டு வழங்குவதற்கான தனது வழிகாட்டு நெறிமுறைகளில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில்,

”வாடிக்கையாளர்களை இதர கார்டு கட்டமைப்புகளின் சேவையைப் பெறுவதைத் தடுக்கும் வகையில், எந்த கார்டு நெட்வொர்க்குடனும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது.

புதியதாக கிரெடிட் கார்டு வழங்கும்போது, கார்டு நெட்வொர்க்கை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.  

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளராக இருந்தால், அவர்கள் கிரெடிட் கார்டை புதுப்பிக்கும்போது கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். இந்த சுற்றறிக்கை வெளியானதில் இருந்து 6 மாதங்களில் உத்தரவை அமல்படுத்த வேண்டும். 

 ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவைப் பின்பற்றுவதை கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களும், கார்டு நெட்வொர்க்குகளும் உறுதி செய்ய வேண்டும். 

ஆனால் 10 லட்சம் அல்லது அதற்குக் குறைவான கிரெடிட் கார்டுகளை மட்டுமே வழங்கி உள்ள நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும் தங்களது சொந்த கார்டு நெட்வொர்க் மூலம் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.” 

என்று கூறப்பட்டுள்ளது.