64670_thumb

சென்னை: ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ். மதனை, காவல்துறையினர்  மற்றும் உறவினர்கள்  கங்கை நதியில் 5 படகுகளில்  தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நேற்று முன் தினம் (ஞாயிறு) வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்பட்ட  கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது.  அதில் மதன், தனக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை எல்லாம்
ஐ.ஜே.கே. நிறுவனத் தலைவர் பாரி வேந்தர்தான், தீர்த்து வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து,அந்தக் கடிதத்தை வேந்தர் மூவிஸ் மதன்தான் எழுதினாரா? உண்மையில் அது அவரின் ‘லட்டர்பேடு’ தானா என்பது குறித்து தீவிர  விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மதன் தனது குடும்பத்தாரோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.  இதனால் பதற்றமான மதனின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் வாரணாசி சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மதனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து வாரணாசி சென்றுள்ள சினிமா தயாரிப்பாளர் சிவா தெரிவித்ததாவது:

“மதன் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்துவிட்டோம்.அங்கு அவர் அறையைக் காலி செய்யவில்லை. அவரின் பேக் மற்றும் உடைமைகள் அறையிலேயே  இருக்கின்றன. ஆனால் மதனைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் பதற்றமான நாங்கள் உள்ளூர் நபர்கள் மற்றும் காவலர்கள் உதவியோடு,   5 படகுகள் அமைத்து கங்கை நதியில் தேடிவருகிறோம். மேலும்,வாரணாசிக்கு  மதன் அடிக்கடி வரும் பழக்கம் உடையவர். அதனால் அவருக்கு இங்குப் பழக்கம் உள்ள நண்பர்கள் மூலமும் அவரை தேடி வருகிறோம்.

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு  உதவும் லொகேஷன் மேனேஜர்கள் மூலமும் மதனைத்  தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று சிவா தெரிவித்தார்.