டில்லி
கடந்த ஆறு மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வருமானமாக ரூ.5,26,000 கோடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.3,28,365 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது.
கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை 1 முதல் நாடெங்கும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என அமலாக்கப்பட்ட இந்த வரி விகிதத்தில் பாதி அளவு மாநிலங்களுக்கும் மீதம் மத்திய அரசுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது. ஜி எஸ் டி அமலாக்கம் செய்த புதிதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஜி எஸ் டி மூலம் வருமானம் கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது ஜி எஸ் டி வருமானம் குறைந்துக் கொண்டு வருகிறது. ஜி எஸ் டி அமலாக்கம் செய்வதால் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்ததால் மத்திய அரசு இழப்பீடு வழங்கி வந்தது. கடந்த சில மாதங்களாக அந்த இழப்பீடு வரவில்லை எனப் பல மாநில அரசுகள் புகார் அளித்தன. இது குறித்து மத்திய அரசு ஜி எஸ் டி வருமானம் குறைந்து வருவதால் இழப்பீட்டுத் தொகையை அளிக்க முடியவில்லை எனத தெரிவித்தது.
இந்நிலையில் மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அளித்த அறிக்கையில், “இந்த வருட அரையாண்டான ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மத்திய ஜி எஸ் டி வருமானம் ரூ. 5,26,000 கோடி வரும் என கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் ரூ.3.28,365 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட 40% குறைவாகும்” என கூறப்பட்டுள்ளது.