டெல்லி

ன்று காலை 7 மணிக்கு 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இவற்றில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த முதல்கட்ட  தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.  கடந்த மாதம் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளும், கர்நாடகாவின் 14 தொகுதிகளும் முக்கியமானவை.

இன்று 3 ஆவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த வாக்குப்பதிவு 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்கிறது. அதாவது குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று முக்கியமாக, குஜராத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், இன்றைய வாக்குப்பதிவுடன் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவுக்கு வருகிறது.   இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்த குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் 2-வது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருந்த மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இன்றைய தேர்தலில் இந்த தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் 1,300-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சுமார் 120 பேர் பெண்கள் ஆவர். மேற்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.