மும்பை:

மருந்துகளின் தரத்தை உறுதிபடுத்தும் வகையில் நாட்டில் அதன் விற்பனையை டிஜிட்டல் முறையில் பராமரிக்க மத்திய சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் முதல் மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி, நோயாளிகள், இ.மருந்தகம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரும் நோக்கில் இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. பயணப் பாதையின் தடத்தை கண்டறியும் இந்த திட்டத்தின் மூலம் இணையதளம் மூலமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருந்து விற்பனையையும் முறைப்படுத்த முடியும்.

தற்போது ஏற்றுமதியாகும் மருந்துகளுக்கு மட்டுமே தற்போது பார் கோடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உள்ளூரில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதனை செய்வது கிடையாது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 3 சதவீத மருந்துகள் தரம குறைவானதாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய புதிய திட்டத்தின் மூலம் அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும் ஆன்லைனில் கட்டாயம் தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். விற்பனை தொடர்பான தகவல்கள், தயாரிப்பு பேட்ச் எண், விநியோக அளவு, காலாவதி தேதி ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து மொத்த விற்பனையாளர்கள், ஸ்டாகிஸ்ட்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். சரக்கு பெற்ற விபரம், விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட விபரம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் ஆன்லைன், மொபைல் மூலம் பதிவு செய்யலாம். பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.

மருந்துகள் கட்டாயம் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரை அடிப்படையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஏப்ரல் 15ம் தேதி க்குள் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘‘இந்த திட்டம் வரவேற்க கூடிய ஒன்று. மருந்து விற்பனை வெளிப்படையாக நடக்க இது உதவும். இதை அமல்படுத்த மருந்து நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாகும்’’ என்று கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் நிறுவன தெற்காசிய துணைத் தலைவர் வைத்தீஸ் தெரிவித்துள்ளார்.