லக்னோ:

உ.பி. முதல்வராக ஆதித்யாநாத் பொறுப்பேற்ற ஒரே நாளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 மாடு இறைச்சி கூடம் மூடப்பட்டுள்ளது.

இயந்திரம் மூலம் மாடுகளை இறைச்சிக்காக கொல்வது மற்றும் சட்டவிரோத மாடு அடிக்கும் இறைச்சி கூடங்கள் மூடப்படும் என பாஜ தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் செயலில் முதல்வர் ஆதித்யாநாத் ஈடுபட தொடங்கிவிட்டார்.

முன்னதாக கடந்த 17ம் தேதி பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில்,‘‘மாடு இறைச்சி கூடங்கள் தொடர்பான பிரச்னையை கட்சி தீவிரமாக நடைமுறைபடுத்தும். வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் உ.பி. இடம்பெறும். நலிவடைந்த மாநிலங்களின் பட்டியலில் இருந்து உ.பி. அகற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதேபோன்ற தகவலை தான் ஆதித்யாநாத் தலைமையில் நடந்த இரண்டாவது அமைச்சரவை கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயந்திர முறையை முடக்கினால் உ.பி.யில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி பாதிக்கும் என்று அதன் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘மாநிலத்தின் வளர்ச்சி தான் தேர்தல் வாக்குறுதியில் முதலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாஜ உ.பி.யில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தேர்தல் யுக்தி தான் என்று நினை க்கிறோம். பதிவு பெற்ற இறைச்சி கூடங்களை எப்படி மூடுவார்கள். நாங்கள் எருமை இறைச்சியை தான் விற்பனை செய்கிறோம். மாட்டு இறைச்சி அல்ல. இறைச்சியின் தரத்தை அதிகரிப்பதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதை நம்பி பல தொழிலாளர்கள் உள்ளனர்’’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.