ம்பால்

த்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருவதால் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இக் கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில காவல்துறையுடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதி, பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் காணாமல் போய் இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் எங்கு சென்றனர்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அவர்கள் ஆயுதமேந்திய கும்பலிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.  குற்றத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்வர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றபோது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தற்போது மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.