டில்லி

த்திய சுகாதார அமைச்சர் கலப்பட மருந்து தயாரிப்பதாக எழுந்த சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் கடந்த ஆண்டு உயிரிழந்தனர்.  அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தைப் பயன்படுத்தியதால் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,-

“இந்தியா தான் உலகத்துக்கே மருந்தகம். அத்துடன் தரமான மருந்தகம் என்பதை ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.  அவ்வகையில், இந்திய மருந்துகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டவுடன், அதுபற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினோம்.

காம்பியா நாட்டில் இந்திய மருந்துகளால் குழந்தைகள் இறந்ததாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியிருந்தார்.  எனவே அதுபற்றிய உண்மைகளை தெரிவிக்குமாறு அந்த அமைப்புக்குக் கடிதம் எழுதினோம். இதுவரை பதில் வரவில்லை.

குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய ஒரு நிறுவனத்தின் மாதிரிகளைப் பரிசோதித்தோம். அப்போது, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தது தெரிய வந்தது. . இந்தியா கலப்பட மருந்து விஷயத்தில், சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

தரமான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யத் தொடர்ந்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். யாரும் கலப்பட மருந்தால் இறக்கக்கூடாது என்று ஒழுங்குமுறை அமைப்புகளை உஷார் படுத்தி வருகிறோம்.

எனவே கலப்பட மருந்து குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால், 71 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதில் 18 நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்”

என்று தெரிவித்துள்ளார்.