டில்லி

மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

பல மாநிலங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் இதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

அவர் டெங்கு காய்ச்சலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கையாளுவதற்கான தயார் நிலையை அவர் ஆய்வு செய்தார். மேலும் நாடு முழுவதும் டெங்கு பரவலின் நிலை மற்றும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துக்கூறினர்.

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயால் ஏற்படும் சவாலைச் சுட்டிக்காட்டிய மன்சுக் மாண்டவியா, வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தயாராக வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினார். இதில், தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும் மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். டெங்கு தொற்றைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார். மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரிசோதனை கருவிகள் உள்பட மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். டெங்கு தொற்று தொடர்பான தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது என்பதை மாண்டவியா எடுத்துரைத்தார்.