டில்லி

தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகக் கேரள அரசின் வாகனம் குடியரசு தின ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டில்லியில் வருடா வருடம் குடியரசு தின அணிவகுப்பில் ஒவ்வொரு மாநில வாகனமும் செல்வது வழக்கமாகும்.   அந்தந்த மாநிலங்களுக்கு என உள்ள சிறப்பு அம்சங்கள் இந்த வாகனங்களில் இடம் பெறுவது வழக்கமாகும்.   இந்த வாகனத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து மத்திய அரசுக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மாநில அரசின் வாகனங்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள மத்திய அரசு தடை விதிப்பது வழக்கமாகும்.  சென்ற வருடம் கேரள மாநில வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது  அம்மாநிலத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரண்டாம் முறையாகக் கேரள அரசு வாகனத்துக்கு இந்த வருடமும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இந்த வாகனத்தில் திருச்சூர் பூரம், மோகினி ஆட்டம், களரி, யானை, உள்ளிட்ட கேரளாவின் பல அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அம்மாநில அரசு மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது.

கேரள அரசின் வாகனத்தில் அதிக அளவில் சிவப்பு நிறம் பயன்படுத்தப் பட்டிருந்தது.  அதனால் குடியரசு தின ஊர்வலத்தில் அந்த வாகனம் செல்ல அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.  இதையொட்டி கேரள அரசு இந்த வாகனத்தின் நிறத்தைப் பச்சையாக மாற்ற முடிவு செய்தது.  ஆயினும் மத்திய அரசு கேரள வாகனத்துக்கு தடை  விதித்துள்ளது.