சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள்  டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு ஊதியம் வழங்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்  தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்த முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் பணியின்போது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டது. அதையடுத்து, அவர்  இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும்,  பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  தனது இடைநீக்க உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரயின்போது,  விசாகா விசாரணைக் குழு ஒருதலைபட்சமானது, அதில் தனக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அது உண்மையில்லை  என்று குறிப்பிட்டதுடன்,  தன்மீதான புகாரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தானாக முன்வந்து  விசாரித்து வந்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டியதுடன், இடைநீக்கம் செய்யப்பட்ட எனக்கு  இடைக் கால நிவாரணமாக 50சதவிகித ஊதியம் தரப்பட வேண்டும். ஆனால், அதை தமிழகஅரசு தர மறுக்கிறது,  அதை  வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாய உறுப்பினர் மோரி, தமிழகஅரசு ராஜேஷ்தாஸ்-க்கு உரிய இடைநீக்க கால ஊதிய தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழ்நாடு உள் துறைச் செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே விழுப்புரம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை முழுமையாகப் படிப்பதற்கு அவகாசம் தராமல், தனக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.