சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்துள்ளது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியா  முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ.  தேர்வை எழுதினார்கள்.  இந்தத் தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியானது.   கடந்த வருடத்தை விட இம் முறை  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது.

தேர்வு முடிவுகள் வெளியானதும், சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்துத்தான் மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்தது.

மும்பையைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்ற பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தார். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்தார். மறு கூட்டல் முடிவில், அவர் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. இது போல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண்  அளிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுவரை இல்லாத  அளவுக்கு, மதிப்பெண் கூட்டுதலில் பிழை ஏற்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இதனால், மாணவர்களும் மற்றும் பெற்றோரும் கடும்  அதிரச்சியடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமரிடம் முறையிட பெற்றோர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.